வெப்ப அலை காரணமாக மகாராஷ்டிராவின் அகோலாவில் 144 தடை உத்தரவு அமல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது.

ராஜஸ்தானில் கடந்த 3 நாட்களில் மட்டும் 22 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்து உள்ளனர். மத்திய பிரதேசத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிராவின் அகோலா நகரில் நேற்று 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதை யொட்டி அந்த நகரில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது. மதிய நேரத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அகோலா மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மும்பையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வெயில் காரணமாக ராஜஸ்தானில் தூய்மைப் பணியாளர்களின் பணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன்படி அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே தூய்மைப் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என்று அந்த மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்: ராஜஸ்தானின் பலோடி நகரில் நேற்று 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது நாட்டில் பதிவான மிக அதிகபட்ச வெப்ப நிலை ஆகும். வடகிழக்கு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE