பிஹார்: லாக் அப்பில் இருந்து 4 பேர் பலவந்தமாக விடுவிப்பு: ஆய்வாளர் சஸ்பெண்ட்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பிஹாரின் மதுபனி தொகுதி காவல்நிலைய சிறையில் பலவந்தாக புகுந்து 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இதை தடுக்காததுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 20 இல் மதுபனி மக்களவை தொகுதியின் ஜலே சட்டப்பேரவையின் கீழான வாக்குச்சாவடியில் தேர்தல் நடைபெற்றது. அப்போது அங்கு 3 பெண்கள் மற்றும் ஒரு இளைஞர் போலி வாக்குப்பதிவு செய்ததாகக் கைதாகினர்.

இவர்கள் அருகிலுள்ள ஜலே காவல்நிலையத்தின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதேநாள் இரவு காவல்நிலையம் வந்த ஒரு கும்பல், சிறையிலிருந்த நால்வரையும் பலவந்தமாக விடுவித்து அழைத்துச் சென்றது.

இதை தடுக்க முற்படாத அக்காவல்நிலைய ஆய்வாளர் பிபின் பிஹாரி, விசாரணைக்கு பின் நேற்று பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அப்பகுதியின் மிதிலா டிஐஜியான பாபுராம் இட்டுள்ளார்.

இத்துடன், நால்வரை விடுவித்து சென்ற இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த சம்பவம் நடந்தபின் மதுபனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான ஜெகன்நாத் ரெட்டி, விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன் மீதான விசாரணையை அப்பகுதியின் நகர டிஎஸ்பி காம்தவுலி ஜோதி குமாரி நடத்தி அறிக்கை சமர்ப்பித்திருந்தார். தனது அறிக்கையில் அவர் கைதான நால்வர் மீதும் பதிவான வாக்குப்பதிவு வழக்கு போலியானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது அறிக்கையில், ‘வாக்குப்பதிவு முடிந்த பின்பும் அந்த நால்வர் வாக்குச்சாவடியில் நின்றிருந்தனர். இதனால், அவர்கள் மீது தவறாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பிறகு பெண்கள் மகளிர் காவல்நிலைய சிறையிலும், இளைஞரை அருகிலுள்ள சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்களை இரவு 11.00 மணிக்கு இருவர் தலைமையில் வந்த கும்பல் விடுவித்து அழைத்து சென்றுள்ளது.

இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தாதுடன் அதை தம் மேல் அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் அளிக்கவும் ஆய்வாளர் பிபின் பிஹாரி தவறியவர் நடவடிக்கைக்கு உரியவர்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆதரவில் பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். இங்கு மக்களவை தேர்தல் ஏழுகட்டங்களாக நடைபெறுகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE