மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியை சேர்ந்தவர் அவ்தூத் தத்தார். அமெரிக்காவில் பணியாற்றும் இவர், மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே அண்மையில் இந்தியா வந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தார். 6 இடங்களுக்குச் சென்று அவர் பார்த்தபோதும் எந்தவொரு பட்டியலிலும் அவரது பெயர் இல்லை.
இதுகுறித்து அவ்தூத் தத்தா கூறும்போது, “அமெரிக்காவில் வசித்தாலும் ஒவ்வொரு முறை தேர்தலின்போதும் இந்தியா வருவேன். இந்தியாவில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை பார்த்தும், வெளிநாடுகளில் இந்தியாவின் பெயர் மரியாதையுடன் கூறப்படுவதை பார்த்தும் தான் இந்த முறையும் தேர்தலில் பங்கேற்க ஆவலுடன் வந்தேன்.
ஆனால் 6 இடங்களுக்கு சென்று பார்த்தபோதும் எந்தவொரு பட்டியலிலும் எனது பெயர் இல்லை. பிறகு தேர்தல் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, எனது பெயர் நீக்கப்பட்டுவிட்டதாக கூறினர். இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன்” என்றார்.