“கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெல்வோம்” - ஜெகன்மோகன் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் இதுவரை இல்லாத வகையில் 81.86 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 2019 தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தங்கள் பிரச்சார உத்திகளை வகுப்பதற்காக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் குழுவுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்நிலையில் விஜயவாடாவில் நேற்று ஐ-பேக் குழுவினர் நடத்திய கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று பேசியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீங்கள் மிகவும் அற்புதமாக பணியாற்றினீர்கள். ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. ஆந்திர தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்க்கிறது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை தரும் வகையில் இருக்கும்.

கடந்த 2019 தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 22 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதைவிட இந்த முறை அதிக இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்புகிறேன். உங்கள் சேவை எங்களுக்கு தொடர்ந்து தேவை. இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE