புதுடெல்லி: ‘மோடியின் உத்தரவாதம்’ வீழ்ச்சியடைந்ததாலும் ‘400 ப்ளஸ் வெற்றி’ முழக்கம் மவுனமாக புதைந்து போனதாலும் அதிகாரத்தில் இருந்து வெளியேற இருக்கும் பிரதமர் மோடி பேசுவதற்கு இந்து - முஸ்லிம் அரசியலைத் தவிர வேறு விஷயங்கள் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி ஒன்றின்போது, “இந்து - முஸ்லிம் அரசியலைக் கையிலெடுக்கத் தொடங்கினால் நான் பொது வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவனாகிப் போவேன்” என்று தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி இவ்வாறு அவரைச் சாடியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில் அவர், “ஒட்டுமொத்த தேசமும் வெளியேறப் போகும் நமது பிரதமர் ஒரு பொய்யர் என்றும், போலித்தனம் அவரின் இயல்பு என்பதையும் அறியும். எனினும், தன்னிரக்கம் கோரும் அவரது வழக்கப்படி, அவர் இந்து - முஸ்லிம் அரசியலை தான் கையில் எடுக்கவில்லை என்று கூறியிருப்பது தினமும் பொய் பேசும் புதிய ஆழத்துக்குள் அவர் தன்னைப் புதைந்து கொள்வதையே காட்டுகிறது.
2024, ஏப்.19-ம் தேதி முதல் பிரதமர் திரும்பத் திரும்ப வெளிப்படையாகவும், கூச்சமின்றியும் வகுப்புவாதத்தைத் தூண்டும் மொழிகள், குறியீடுகள், சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார் என்பது வெளிப்படையான உண்மை. இந்த உண்மைகளை பிரதமர் மோடி அவரின் தனிப்பட்ட நினைவுகளில் இருந்து அழித்து விட்டாலும், நமது கூட்டு நினைவுகளில் இருந்து அவற்றை அழிக்க முடியாது. பிரதமரின் இந்த செயல்களை நாம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றும் துரதிருஷ்ட வசமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் பிரதமரின் பேச்சில் இந்து - முஸ்லிம் அரசியலைத் தவிர வேறு எதுவும் இடம்பெறவில்லை. அவரது கட்சியின் தேர்தல் அறிக்கை, அவரது சொந்த புகைப்பட வரிசைகள், குழப்பமான வார்த்தைகள் மக்களால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்டுவிட்டன. கடந்த சில மாதங்களாக அரசுப் பணத்தில் பெரும் பொருள் செலவில் கொடுக்கப்பட்ட ‘மோடியின் உத்திரவாதம்’ பிரச்சாரம் வீழ்ச்சியடைந்து விட்டது. ‘400 ப்ளஸ்’ இடங்கள் என்ற வெற்று முழக்கமும் மவுனமாக புதைக்கப்பட்டுவிட்டது.
அவரது பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கான கடைசி முயற்சி என்பது காங்கிரஸ் கட்சியைப் பற்றி பொய்யுரைப்பதுதான். அவர் பதவியில் இருந்து இறக்கப்படுவது உறுதியாகி விட்டது. இந்த நிலையில், தற்போது அவர் எல்லாவற்றையும் மறந்தவர் போல நடிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
இணைப்பிதழ்கள்
15 hours ago
தமிழகம்
6 hours ago