வாராணசி தொகுதியின் தேர்தல் அதிகாரி தமிழர் ராஜலிங்கம்

By ஆர்.ஷபிமுன்னா

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் நேற்று தனது இரு கரங்களை கூப்பி வணங்கி வேட்புமனுவை பிரதமர் மோடி தாக்கல் செய்தார். இதை தேர்தல் அதிகாரியாக இருந்து பெற்றுக்கொண்ட ஐஏஎஸ் அதிகாரியான ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் ஒரு தமிழர் ஆவார். வாராணசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி, சரியாக நண்பகல் 12.00 மணிக்கு நுழைந்தார்.

அவருடன், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடி மனுவின் பரிந்துரையாளர்கள் நால்வர் உடன் இருந்தனர். தனது இருக்கையில் அமர்ந்திருந்த ஆட்சியர் ராஜலிங்கம் முன்பாக நேராக சென்று பணிவுடன் நின்றார் பிரதமர் மோடி. தனது இருகரங்களைக் கூப்பி வணங்கியவர் தனது வேட்பு மனுவை ஆட்சியரிடம் அளித்தார்.

பிறகு மனுவை அமர்ந்தபடியே ஆட்சியர் ராஜலிங்கம் சரிபார்க்க, பிரதமர் மோடி அமைதியாக நின்றிருந்தார். பிறகு உறுதிமொழியையும் வாசித்து காண்பித்தவரை அமர்ந்தபடியே ஆட்சியர் ராஜலிங்கம், வணங்கி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வுக்கு பின் தமிழரான ராஜலிங்கம் யார் என்ற தேடல்கள் சமூகவலைதளங்களில் பரவத் துவங்கியது.

தமிழகத்தின் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த சுப்பையா – மாலையம்மாள் தம்பதியரின் மூத்த மகன்தான் ராஜலிங்கம். திருச்சியின் ஆர்.இ.சி அரசு பொறியியல் கல்லூரியின் வேதியியல் பிரிவில் 2003-ல் பட்டம் பெற்றவர். ஒசூரின் சன்பார்க் கெமிக்கல் நிறுவனத்தில் பணியாற்றினார். குடிமைப்பணி தேர்வை விரும்பி ஒரு வருடத்தில் தமது பணியை ராஜினாமா செய்தார்.

2006-ம் ஆண்டில் ஐபிஎஸ் தேர்வில் வென்றவர் உ.பி. மாநிலம் அலிகரில் பணியை துவக்கினார். இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் குடிமைப் பணி தேர்வு எழுதினார். இதன் பயனாக 2009-ல் ஐஏஎஸ் தேர்விலும் வெற்றி பெற்றார்.

தற்போது வாராணசி மாவட்ட ஆட்சியராக ராஜலிங்கம் உள்ளார். அவரின் தலைமை நிர்வாகத்தில் கடந்த 2022 மற்றும் 2023ல் காசி தமிழ் சங்கம விழாக்கள் 2 முறை நடைபெற்றன. பிரதமர் மோடியின் அபிமானத்தை ராஜலிங்கம் பெற்றுள்ளார்.

பல்வேறு கூட்டங்களில் பிரதமர் மோடி இவரை, ‘மிஸ்டர் ராஜலிங்கம்’ என்று பெயரைக் குறிப்பிட்டு அழைப்பது உண்டு. பரிந்துரையாளர்கள் பிரதமர் மோடியின் வேட்பு மனுவின் பரிந்துரையாளர்கள் மிகவும் கவனத்துடன் பிரதமர் மோடியால் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக மொத்தம் 25 பரிந்துரையாளர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் முதலில் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் நால்வரை பிரதமர் மோடி இறுதி செய்தார். இவர்களில் முக்கியமானவராக ஆச்சார்யா கணேஷ்வர் சாஸ்திரி திராவிட் உள்ளார். இவர், அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்கு நாள் குறித்த தலைமை பண்டிதர்.

இரண்டாமவரான பைஜிநாத் பட்டேல், பாஜகவின் தொடக்கக் காலக் கட்சியான ஜனசங்கம் முதல் தொண்டராக இருப்பவர். இதர இருவரில், வாராணசி மாவட்ட பாஜகவின் பொதுச்செயலாளர் சஞ்சய் சோன்கர் மற்றும் லால்சந்த் குஷ்வாஹா ஆகியோர் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்