தேவகவுடாவின் மகன் ரேவண்ணா ஜாமீனில் விடுதலை

By இரா.வினோத்


பெங்களூரு: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை கடத்திய‌ வழக்கில் கைதான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் முன்னாள் அமைச்சருமான ரேவண்ணா நேற்று நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33)பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தேவகவுடாவின் மகன் ரேவண்ணா (66) மீதும் வீட்டு பணிப்பெண் பாலியல் புகார் தெரிவித்தார். இதன்பேரில் அவர் மீதும் வழக்குப‌திவு செய்யப்பட்டது. இதனிடையே பிரஜ்வலுக்கு எதிராக புகார்அளித்த பெண்ணை கடத்தியதாக ரேவண்ணா மீதும் அவரது உதவியாளர் சதீஷ் பாவண்ணா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் போலீஸார் க‌டந்த 11-ம் தேதி ரேவண்ணா, சதீஷ் பாவண்ணா ஆகியோரை கைது செய்தனர். பெங்களூரு நீதிமன்றம் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சிறப்பு புலனாய்வு போலீஸார், ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலுக்கு எதிராக 2 முறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டனர். அவர் வேறு நாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்கும் வகையில் சிபிஐ சார்பில் புளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ரேவண்ணா ஜாமீன் கோரி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து ரேவண்ணா நேற்று பெங்களூரு மத்திய‌ சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறை வளாகத்தில் குவிந்திருந்த மஜத தொண்டர்கள் அவரை வாழ்த்தி முழக்கமிட்டனர்.

சிறையில் இருந்து நேராக ப‌த்மநாபா நகரில் உள்ள தனது தந்தை தேவகவுடாவின் வீட்டுக்கு சென்று, அவரிடம் ஆசி பெற்றார். அங்கு தனது சகோதர‌ரும் முன்னாள்முதல்வருமான குமாரசாமி, மஜதமூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து குமாரசாமி கூறும்போது, ‘‘ரேவண்ணாவை சிறையில் அடைத்ததன் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது. அதனை சட்டப்படி எதிர்கொள்வார்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE