பாபா ராம்தேவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘தவறான விளம்பர’ வழக்கு தொடர்பாக பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா மற்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, அசானுதின் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்விடம், உரிமம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பதஞ்சலி பொருள்களைத் திரும்பப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என அந்நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கோரியதை கேட்டுக் கொண்டனர். அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் மூன்று வார காலத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

தொடர்ந்து, 5 முதல் 7 வரையுள்ள பிரதிவாதிகளான பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர் பாலகிருஷ்ணா மற்றும் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், வழக்கு விசாரணையின் போது, இந்திய மருத்துவ கூட்டமைப்பின் (ஐஎம்ஏ) தலைவர் ஆர்.வி.அசோகன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, பதஞ்சலியின் தவறான விளம்பரங்கள் குறித்த கேள்விக்கு உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக கூறிய கருத்துகளுக்காக நீதிமன்ற அமர்வு முன்பு நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்.

அதற்கு பதில் அளித்த நீதிபதி கோஹ்லி, "நீங்கள் எங்காவது வசதியாக மஞ்சத்தில் உட்கார்ந்து கொண்டு நீதிமன்றத்தை விளக்கி பேட்டி கொடுக்க முடியாது" என்று அசோகனிடம் தெரிவித்தார். மேலும் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், "இந்த நிலையில் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் தலைவர் தாக்கல் செய்திருக்கும் மன்னிப்பு பிரமாணத்தை நாங்கள் ஏற்க விரும்பவில்லை" என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மே 7-ம் தேதி நடந்த விசாரணையின்போது, "அசோகன் கூறிய விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்ததது. முன்னதாக, உத்தராகண்ட் நிறுவனத்தின் மருந்துகள் உரிமை வழங்கும் ஆணையம், பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான திவ்யா பார்மஸி ஆகியவைகளின் 14 பொருட்களுக்கான உரிமத்தை உடனடியாக அமலுக்கு வரும்படி ரத்து செய்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

வழக்கு பின்னணி: பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டில் பதஞ்சலி நிறுவனத்தை தொடங்கினர். கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகளை அறிமுகம் செய்தது. இது தொடர்பாக பதஞ்சலி வெளியிட்ட விளம்பரத்தில், “அலோபதி மருத்துவத்தில் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. எங்களது ஆயுர்வேத மருந்துகள் மூலம் கரோனா, சர்க்கரை நோய், ஆஸ்துமா ஆகியவை நிரந்தரமாக குணமாக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE