வாக்களித்த அப்துல்லா குடும்பத்தாரின் 3 தலைமுறை வாக்காளர்கள்

By செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீரில் நேற்று மக்களவைத் தேர்தலில் 4-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, அவரது மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, அவரது 2 பேரன்கள் ஜாஹிர், ஜமீர் ஆகியோர் நேற்று ஸ்ரீநகரில் வாக்களித்தனர்.

இதன்மூலம் பரூக் அப்துல்லா குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறை வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் ஒரே நேரத்தில் வாக்களித்துள்ளனர்.

இதுகுறித்து உமர் அப்துல்லா கூறும்போது, "இந்த முறை வாக்குப்பதிவின்போது எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர், முதல் முறை வாக்காளர்களாக இருந்தனர். அவர்கள் 2 பேரும் எனது மகன்கள். இதன்மூலம் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறை வாக்காளர்கள் ஒரே நேரத்தில் வாக்களித்துள்ளோம்" என்றார்.

ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் தற்போது தேசிய மாநாட்டுக் கட்சி, தனது கூட்டணிக் கட்சியான ஷியா பிரிவு முஸ்லிமான ஆகா ருகுல்லா மெஹ்தியை நிறுத்தியுள்ளது. அதேநேரத்தில் அவரை எதிர்த்து மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) சார்பில் வஹீத் பாரா போட்டியிடுகிறார்.

2019-ம் ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு நடைபெறும் முதல் மக்களவைத் தேர்தலாகும் இது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE