இப்போதே பங்குகளை வாங்குவது நல்லது; ஜூன் 4-க்குப் பிறகு பங்குச் சந்தை உயரும்: அமித் ஷா நம்பிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜகவின் மோசமான செயல்திறன் காரணமாகவே பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அது வதந்தி என தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இப்போதே பங்குகளை வாங்குவது நல்லது. வரும் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தைகள் கணிசமான ஏற்றத்தை சந்திக்கும் எனஅவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்த கேள்விக்கு அமித் ஷா அளித்த பதில்: பங்குச் சந்தையை தேர்தலுடன் இணைக்க கூடாது. ஆனால்,நிலையான அரசு அமையும்பட்சத்தில் அது பங்குச் சந்தைசிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.

பங்குச் சந்தை கடந்த சில அமர்வுகளில் பல்வேறு காரணிகளால் 16 முறை பெரும் திருத்தங்களை கண்டுள்ளன. 7 கட்ட தேர்தல் முடிந்து ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதில் பாஜக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமையும். அதன் பிறகு இந்திய பங்குச் சந்தைகள் கணிசமான ஏற்றத்தை சந்திக்கும். எனவே, பங்குகளை வாங்க இதுவே சரியான தருணம். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

சென்செக்ஸ் 111 புள்ளி உயர்வு: திங்கள்கிழமை வர்த்தகத்தில் முன்னணி 30 நிறுவனங் களை பிரதிநிதித்துவப்படுத்தும் சென்செக்ஸ் குறியீடு ஆரம்பகட்டத்தில் 850 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அதன்பின்னர் வர்த்தக இறுதியில் 111 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் 72,776 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி 48 புள்ளிகள் உயர்ந்து 22,104-ல் நிலைத்தது.

சர்வதேச அளவிலான சாதகமற்ற நிலவரம், அந்நிய முதலீடு வெளியேற்றம் காரணமாக பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதாக சந்தை ஆய்வாளர் கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE