கர்நாடக அரசை கவிழ்க்க முடியாது: ஷிண்டேவுக்கு சித்தராமையா பதில்

By என். மகேஷ்குமார்

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை யாராலும் கவிழ்க்க முடியாது என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிலளித்தார்.

மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், ''மகாராஷ்டிராவைப் போல கர்நாடகாவிலும் ஆட்சி மாற்றம் நடக்கப் போகிறது. மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் சில‌ காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகப் போகிறார்கள். அதன்பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சி கர்நாடகாவில் அமையும்'' என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், '' கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வலுவாக இருக்கிறது. எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் யாரும் விலை போகிறவர்கள் கிடையாது. எங்கள் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. பாஜகவினரின் பகல் கனவு ஒருபோதும் நடக்காது'' என பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE