பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு: ஆபாச வீடியோவை பரப்பியதாக பாஜகவை சேர்ந்த 2 பேர் கைது

By இரா.வினோத்


பெங்களூரு: மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடா வின் பேரனும் ஹாசன் தொகுதி மஜத எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33), பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வீட்டு பணிப்பெண் உட்பட 3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் அவரது தந்தையும் மஜத எம்எல்ஏவுமான‌ ரேவண்ணா (66) மீதும் வீட்டு பணிப்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் ரேவண்ணா கைது செய்யப்பட்டு, பெங்களூருமத்திய சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை கைது செய்யும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

இதனிடையே, ஹொலேநர்சிப் பூரை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “பிரஜ்வலும் அவரது தந்தைரேவண்ணாவும் 62 வயதான எனதுதாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். பிரஜ்வல் அதனைவீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, எனது தாயை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், நள்ளிரவில் எனக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்து, உடைகளை களையுமாறு மிரட்டினார். அந்த வீடியோவை வைத்துக்கொண்டு எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

பாஜக நிர்வாகிகள்: பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்களை பென் டிரைவ் மூலம் பரப்பியதாக ஹொலேநர்சிப்பூர் பாஜக வேட்பாளர் தேவராஜ் கவுடா கடந்தசனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அதேபோல, பிரஜ்வலின் ஆபாச வீடியோக்களை பரப்பியதாக ஹாசனை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் லிக்கித் கவுடா, எலகுண்ட சேத்தன் ஆகிய 2 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்த‌னர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE