மேற்கு வங்க கவர்னர் மீதான பாலியல் புகாரில் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? - பிரதமருக்கு மம்தா பானர்ஜி கேள்வி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: பாலியல் புகாருக்கு உள்ளான மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார். பாரக்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அம்டங்கா கிராமத்தில் தேர்தல் பேரணியின் போது மம்தா பேசியதாவது:

சந்தேஷ்காலி விவகாரத்தில் பிரதமர் இன்னும் பொய்களை மட்டுமே பேசி வருகிறார். இந்த விவகாரத்தில் பாஜகவின் சதி இப்போது அம்பலமாகிவிட்டதால் அவர் வெட்கப்பட வேண்டும். 70-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ரூ.2,000 கொடுக்கப்பட்டதை வீடியோ மூலம் உள்ளூர் பாஜக தலைவரே ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இந்த சர்ச்சையின் பின்னணியில் சுவேந்து அதிகாரியின் சதி உள்ளதாக கூறப்படுகிறது.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மேற்கு வங்ககவர்னருக்கு எதிராக மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மட்டும் அமைதி காக்கிறார். இது, பெண்களுக்கு எதிரான பாஜகவின் உண்மை முகத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE