மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க ராகுல் சம்மதம்: முன்னாள் நீதிபதிகள் அழைப்பை ஏற்ற காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பத்திரிகையாளர் என்.ராம், முன்னாள் நீதிபதிகள் அழைப்பை ஏற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியுடன் பொது விவாதத்தில் பங்கேற்று நேருக்கு நேர் விவாதிக்க தயார் என அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, தேர்தல் தொடர்பாக நேரில் விவாதம் நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை, பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் அனுப்பியுள்ளனர்.

விவாதம் நடத்துவது தொடர்பாக ராகுல் காந்தி சார்பில் காங்கிரஸ் கட்சி வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், "விவாதத்துக்கான அழைப்பு தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆலோசித்து. அதன்படி, ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயோ விவாதத்தில் கலந்து கொள்வார்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்க பதிவில், "பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் என்பதால், பொதுமக்கள் தங்கள் தலைவர்களிடம் நேரடியாகக் கேட்கத் தகுதியானவர்கள். பிரதமர் மோடி எப்போது விவாதத்தில் பங்கேற்க ஒப்புக்கொள்கிறார் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்தவும். அதனைத்தொடர்ந்து விவாதத்தின் விவரங்கள் மற்றும் வடிவம் பற்றி ஆலோசிக்கலாம்." என்று தெரிவித்துள்ளார். எனினும், மோடியும் பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களும் விவாதத்தில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

பின்னணி: மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்களின்போது இதுவரை இல்லாத வகையில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அனுமானங்களின் பேரில் பல புகார்களை முன்வைத்துள்ளனர்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகார் கூறி வருகிறார். அதேபோல், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் இடஒதுக்கீடுகள் அனைத்தையும் முஸ்லிம்களுக்கு ஒதுக்குவார்கள் என்றும், அயோத்தியின் ராமர் கோயில் தீர்ப்பை மாற்றி எழுதி விடுவார்கள் என்றும் பிரதமர் மோடி புகார் கூறியுள்ளார். இந்தவகையில் தொடரும் புகார்கள் அனைத்தும் அனுமானங்களின் பேரில் முன்வைக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.

இவை உண்மையிலேயே சாத்தியமா? என்பதை அறியும் வகையிலும், பொதுமக்கள் சார்பிலான மேலும் பல கேள்விகளுடன் விவாதம் செய்ய இரண்டு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில், மூத்த பத்திரிகையாளரும் `தி இந்து' நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான என்.ராம், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகிய மூவரும் கையொப்பம் இட்டு கடிதம் எழுதியுள்ளனர்.

தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இக்கடிதமானது, நேற்று பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வசிக்கும் அரசு குடியிருப்பில் பெறப்பட்டுள்ளது. இந்த விவாதமானது எந்த சார்பும் இல்லாத வகையிலும், லாபநோக்கம் இல்லாத மேடையில் நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எழுதப்பட்டுள்ள இக்கடிதம், இந்திய பிரஜைகள் எனும் வகையில் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மூவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இடஒதுக்கீடு, அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370 மற்றும் சொத்துகளின் மறுபங்கீடு ஆகிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸுக்கு பொதுவெளியில் பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுதல், தேர்தல் பத்திரங்கள், சீனாவின் நடவடிக்கைகளுக்கான மத்திய அரசின் பதில் நடவடிக்கை ஆகியவை மீது பிரதமர் மோடியிடம் பதில்களை கேட்டதுடன் அவரை பொது விவாதத்துக்கும் அழைத்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதத்தில் கலந்துகொள்ள இருவராலும் முடியாவிட்டால் அவர்கள் சார்பில் ஒருவரை அனுப்பி வைக்கும்படியும் மூவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் நகலை தனது எக்ஸ் தளத்திலும், பத்திரிகையாளர் என்.ராம் நேற்று பதிவேற்றம் செய்துள்ளார். இந்த பதிவும் வைரலாக தொடங்கி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE