‘காங்கிரஸார் வீடுகளில் சிக்கும் கட்டுக் கட்டான நோட்டுகள் எங்கிருந்து வருகின்றன?’ - பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

ஆந்திராவில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் விஷயத்திலும் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன் வெறும் ஊழல் மட்டுமே ஆட்சி புரிந்தது. இண்டியா கூட்டணி தலைவர்கள் ஏன் தினமும் அமலாக்கத் துறை மீது பாய்கிறார்கள்?

ஜார்க்கண்டில் காங்கிரஸ் அமைச்சர் வீட்டில் பணிபுரிபவரின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ளது. இதற்குமுன் காங்கிரஸ் எம்.பி. வீட்டிலும் மலையளவு பணம் கிடைத்தது. நோட்டு இயந்திரங்கள் பழுதாகும் வரை அந்தப் பணம் எண்ணப்பட்டது. ஏன் காங்கிரஸார் வீட்டிலேயே இவ்வளவு பணம் கிடைக்கிறது? இதெல்லாம் ஏதாவது விநியோகத்திற்காக கொண்டு வரப்பட்டதா? இதற்கு காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஒடிசாவில் மோடி பரபரப்பு பேச்சு: ஒடிசாவில் மக்களவைத் தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி அந்த மாநிலத்தின் 21 மக்களவைத் தொகுதிகள், 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஒடிசாவில் தற்போது முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தள (பிஜேடி) ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஆளும் பிஜேடி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைபோட்டி நிலவுகிறது. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் ஒடிசாவின் பெர்காம்பூர், நபரங்பூரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அவர் பேசியதாவது:

ஒடிசாவில் நீர் வளம், நில வளம், கனிம வளம் என அனைத்து வளங்களும் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் ஒடிசா மக்கள் இன்னமும் ஏழைகளாகவே உள்ளனர். இதற்கு காங்கிரஸும் பிஜு ஜனதா தளமுமே காரணம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் 50 ஆண்டுகள் காங்கிரஸும் கடந்த 25 ஆண்டுகளாக பிஜு ஜனதா தளமும் ஒடிசாவின் வளங்களை கொள்ளையடித்து வருகின்றன. பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த மிகச் சிறிய தலைவர்கள்கூட ஆடம்பரமான சொகுசு பங்களாக்களில் வசிக்கின்றனர்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். முதல்வரின் சொந்த தொகுதியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. ஹிஞ்சிலி தொகுதி தொழிலாளர்கள் இதர மாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் அவலம் நீடிக்கிறது. பெரும்பாலான அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிகளில் இடைநிற்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

பெண்களின் நலனில் பிஜு ஜனதா தள அரசுக்கு துளியும் அக்கறை கிடையாது. மத்திய அரசு சார்பில் ஒடிசாவில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தை ஒடிசா அரசு ரத்து செய்துள்ளது.

ஜல்ஜீவன் திட்டத்தில் ஒடிசாவில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.10,000 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிதியை ஒடிசா அரசு பயன்படுத்தவில்லை. ஒடிசாவின் சாலை மேம்பாட்டு பணிக்காக மத்திய அரசு சார்பில் தாராளமாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாநிலம் முழுவதும் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. மத்திய அரசு சார்பில் ஒடிசாவில் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஒடிசா அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது.

ஒடிசாவில் காங்கிரஸ் கட்சி முழுமையாக தோல்வி அடைந்து உள்ளது. ஆளும் பிஜு ஜனதா தளம் தேய்ந்து வருகிறது. இப்போது மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது. வரும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி காலாவதியாகும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பாஜக-பிஜேடி உறவு: பாஜக, பிஜேடி கட்சிகளிடையே இதுவரை சுமுகமான உறவு நீடித்து வந்தது. மத்தியில் பாஜகவின் பல்வேறு கொள்கை முடிவுகளுக்கு பிஜேடி தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வந்தது. தற்போதைய மக்களவைத் தேர்தலின்போது பாஜக, பிஜேடி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை.

கடந்த தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை தவிர்த்து வந்தனர். இருவருக்கும் இடையே சுமுக உறவு நீடித்து வந்தது. இந்த சூழலில் முதல் முறையாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE