பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை ரத்து செய்ய விரும்புகிறார்: ராகுல் தாக்கு @ தெலங்கானா

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்; அவர் மக்களிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்க விரும்புகிறார் என்று ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

தெலங்கானாவின் அடிலாபாத் (எஸ்டி) தொகுதிக்குட்பட்ட நிர்மல் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையில் நடக்கும் போட்டி. காங்கிரஸ் கட்சி அரசியல் சாசனத்தை பாதுகாக்க முயற்சி செய்கிறது. பாஜக - ஆர்எஸ்எஸ் இணைந்து அரசியலமைப்பையும், மக்களின் உரிமையையும் முடிவுக்கு கொண்டு வர விரும்புகின்றன.

நரேந்திர மோடி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர். அவர் இட ஒதுக்கீட்டை உங்களிடமிருந்து பறிக்க விரும்புகிறார். இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்து அதிகரிப்பது தான் நாட்டின் முன் உள்ள பெரிய பிரச்சினை.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை தற்போது உள்ள 50 சதவீதத்தில் இருந்து அதிகப்படுத்தும் என்று தேர்தல் அறிக்கையில் நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். ஆனால் பாஜக தலைவர்கள், இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள்.

மோடி அரசுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கினார். பாஜக தலைமையிலான அரசு கொண்டு வந்த ஒப்பந்த முறை, இடஒதுக்கீட்டை நீக்குவதாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுத்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள ஒப்பந்த முறைகளை நீக்குவோம். நிரந்தர வேலை வாய்ப்புகள் உருவாக்குவோம். தற்காலிக வேலை வாய்ப்புகளை இல்லை.

நரேந்திர மோடி இது வரை தனது பேச்சில் இட ஒதுக்கீட்டில் உள்ள 50 சதவீத தடையை நீக்குவோம் என்று கூறியதே இல்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை மாற்றி அதனை முடிவுக்கு கொண்டு வந்து விடுவோம் என்று பாஜக தலைவர்கள் நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளனர். அரசியல் சாசனம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால், இடஒதுக்கீடு நீக்கப்பட்டுவிடும். பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருக்கவே பாஜக விரும்புகிறது.

பிரதமர் மோடி, 22 -25 பேரின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளார். ரூ. 16 லட்சம் கோடி என்பது 24 வருடங்களுக்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பணம். அதனை மோடி 22 மக்களுக்கு கொடுத்துள்ளார். 22 பணக்காரர்கள் நாட்டின் 70 கோடி மக்களின் பணத்தினை வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இதனை மாற்ற இருக்கிறது.

தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அதே வாக்குறுதி நாடுமுழுவதும் அமல்படுத்தப்படும்.

நாட்டிலுள்ள ஏழை குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கில் வருடத்துக்கு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும். மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசிகள், சிறுபான்மையினர் மற்றும் பொதுப்பிரிவில் உள்ள ஏழைகள், ஆனால் நாட்டில் உள்ள எந்த அமைப்பிலும் அவர்களுக்கு இடம் இல்லை.

காங்கிரஸ் கட்சி முன்மொழிந்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டின் அரசியலை மாற்றும். ஏனென்றால் ஏழைகள் மற்றும் 90 சதவீத மக்கள் அவர்களின் மக்கள் தொகை மற்றும் பிரதிநிதித்துவத்தைப் பற்றி அறிந்து கொள்வார்கள்.

நாங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு அமைப்பிலும் கணக்கெடுப்பு நடத்துவோம். பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் ஆதிவாசிகள் மற்றும் ஏழைகளிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை கண்டறிவோம். சாதிவாரி கணக்கெடுப்புக்கு பின்னர் தெலங்கானாவிலும் நாட்டிலும் புதிய அரசியல் உருவாகும்.

அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும், இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். பணக்கார்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, ஏழைகள், விவசாயிகள், தலித்துகள் மற்றும் பிறமக்களின் ஆட்சி நிறுவப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE