புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்கு பிறகு, டெல்லி திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. கேஜ்ரிவாலுக்கு மக்கள் தங்கள் செய்திகளை எழுதுவதற்காக லஜ்பத் நகரில் இரண்டு வெள்ளை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஜாங்புரா தொகுதி எம்எல்ஏ பிரவீன் குமார் கூறும்போது, “கையெழுத்து இயக்கத்தை நாங்கள் இங்கு தொடங்கியுள்ளோம். இதனை டெல்லியின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்வோம்.
கேஜ்ரிவால் மீது டெல்லி மக்கள் எவ்வளவு அன்பு வைத்துள்ளனர் என்பதை பாஜகவினருக்கு காட்டுவதற்காக இதனை நடத்துகிறோம். கையெழுத்துகளை சேகரித்த பிறகு அவற்றை பாஜகவுக்கு அனுப்பி வைப்போம்” என்றார்.