காஷ்மீர் சிறுமி பலாத்காரம்: சர்ச்சைக்குரிய கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட தனியார் வங்கி மேலாளர் ‘டிஸ்மிஸ்’

 காஷ்மீரில் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வங்கி ஊழியரை வங்கி நிர்வாகம் நீக்கியுள்ளது.

காஷ்மீரில் காதுவா பகுதியில் முஸ்லிம் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஜனவரி 10-ம் தேதி காணாமல் போனார். அவர் 17-ம் தேதி சடலமாக காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். அந்தச் சிறுமிக்கு நடத்தப்பட்ட உடற்கூறு பரிசோதனையில் போதை மருந்து செலுத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிறுமிக்கு நீதி கிடைக்க போராட்டம் நடத்தி வருகின்றன.

நீண்ட நாட்களுக்குப் பின் இந்த விவகாரத்தில் கருத்துதெரிவித்த பிரதமர் மோடி, குற்றவாளிகளைத் தப்பிக்க விடமாட்டோம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிகிடைக்கும் என்று உறுதியளித்தார்.

இந்தச் சூழலில் கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றி வந்த விஷ்ணு நந்தகுமார் காஷ்மீர் சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவம் தொடர்பாகச் சமீபத்தில் அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டார்.

அதில் நல்லவேளை அந்தச் சிறுமி இந்தச் சின்ன வயதிலேயே கொல்லப்பட்டுவிட்டார். இல்லாவிட்டால், வளர்ந்த பின் என்றாவது ஒருநாள் மனித வெடிகுண்டாக மாறி இந்தியாவுக்கு எதிராக மாறிவிடுவார் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்தக் கருத்துக்கு அனைத்துத் தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. ஃபேஸ்புக்கில் பலரும் விஷ்ணு கண்டித்து வாசகங்கள் எழுப்பினர். பலர் உடனடியாக விஷ்ணுவை வேலையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதற்காக ட்விட்டரில் டிஸ்மிஸ் யுவர் மேனேஜர் என்று பிரத்தியேகமாக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு வைரலானது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அந்தத் தனியார் வங்கியில் வாடிக்கையாளர்களாக இருக்கும் ஏராளமானோர் கடும் கண்டனத்தையும், விஷ்ணுவை டிஸ்மிஸ் செய்யவும் வலியுறுத்தினார்கள்.

மனிதநேயமற்ற வகையில் உங்கள் வங்கியில் ஊழியர் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்து குற்றவாளியைவிட மோசமாக நடந்து கொள்கிறார் என்று ஒருவரும், எப்படி இப்படிப்பட்ட மோசமான மனநிலையைக் கொண்டவரை வேலைக்கு வைத்திருக்கிறீர்கள், உங்கள் வங்கியின் பெயரை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று சிலரும், விஷ்ணுவை உடனடியாக டிஸ்மிஸ் செய்யுங்கள் என்று பலரும் ட்வீட் செய்ததால், வங்கி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.

இதையடுத்து, வங்கி நிர்வாகத்தின் சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் வங்கியின் துணை மேலாளர் விஷ்ணு வேலையில் இருந்து கடந்த 11-ம் தேதி நீக்கப்பட்டுவிட்டார். வேலையில் மோசமாகச் செயல்பட்டதால் அவர் பணி நீக்கம் செய்யபட்டார். அவரின் சர்ச்சைக்குரிய கருத்துகள் அனைவரின் மனதையும் புண்படுத்திவிட்டது. இதை வங்கி நிர்வாகமும் கண்டிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே விஷ்ணுவின் குடும்பத்தார் அனைவரும் பாரம்பரிய ஆர்எஸ்எஸ், பாஜக ஆதரவாளர்கள் என்று ஒரு தனியார் செய்தி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE