த‌மிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது: காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டம்

By இரா.வினோத்


பெங்களூரு: காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக அரசு சார்பில் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், குழு செயலர் டி.டி.சர்மா, உறுப்பினர் கோபால் ராய், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில், 4 மாநிலங்களில் காவிரி பாசனப் பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

நிலுவையில் 95 டிஎம்சி நீர்: அப்போது, தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டதாவது: உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு 2023 ஜூன் மாதத்தில் இருந்து 2024 ஏப்ரல் 28-ம் தேதி வரை கர்நாடக அரசு 174.497 டிஎம்சி நீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால்,78.728 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இன்னும் 95.770 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது.

இதுதவிர, பிப்ரவரி முதல் ஏப்ரல் 28 வரை பிலிகுண்டுலுவில் 7.333 டிஎம்சி நீரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 2.016 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதில், 5.317 டிஎம்சி நிலுவையில் உள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் 20.182 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1,200 கன அடி நீர்திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள4 அணைகளின் நீர் இருப்பை கணக்கிட்டு, தமிழகத்துக்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய 25 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 2.5 டிஎம்சி நீரையும் கர்நாடகா திறந்துவிட வேண்டும். இவ்வாறு தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டது.

கர்நாடகாவில் மழை இல்லை: இதற்கு கர்நாடக அரசின் தரப்பில் கூறியதாவது: கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. பிப்ரவரி முதல் ஏப்ரல் வரைமழை இல்லை. தற்போது கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளிலும் மிக குறைந்த அளவிலேயே நீர் உள்ளது.

இதை கொண்டே பெங்களூரு, மைசூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டால் கர்நாடகாவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். தற்போதைய சூழலில் தமிழகத்துக்கு நீர் திறக்க இயலாது. இவ்வாறு கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீண்ட விவாதத்துக்கு பின்னர் காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா பேசும்போது, ‘‘மே மாதத்தில் திறக்க வேண்டிய 2.5 டிஎம்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீரை கர்நாடகா திறக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கக்கூடிய நிலையில் கர்நாடகாவின் நீர் நிலைமை இல்லை.

மே 2-வது வாரத்துக்கு பிறகு அந்த கோரிக்கை குறித்துஆராயலாம். காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் மே 16-ம் தேதி நடைபெறும்'' என்று தெரிவித்தார். ஒழுங்காற்று குழுவின் இந்த கருத்து தமிழக அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், கர்நாடகாவில் விவசாய, கன்னட அமைப்பினர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE