இந்தியாவில் யார் பிரதமராக இருந்தாலும் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்: ப.சிதம்பரம் கருத்து

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம் பரம் நேற்று கூறியுள்ளதாவது: உலக பொருளாதாரத் தரவரிசை 2024-ன்படி, அமெரிக்கா,சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக 4.8 டிரில்லியன் டாலருடன் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. தற்போது, ஜெர்மனிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மதிப்பானது ஏறக்குறைய ஒரேமாதிரி அளவாக உள்ளது.

உலகின் முதல் 10 பொருளாதார நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் தரவரிசையில் இந்தியாவை விட பின்தங்கியே உள்ளன.

எப்படியும் நடக்கப்போகும் ஒன்றை பிரதமர் உத்தரவாதமாக கூறி வருகிறார். எண்கணிதத்தால் தானாக நடக்கக்கூடிய தவிர்க்க முடியாத தன்மையை பிரதமர் மோடி மிகைப்படுத்தி மக்களுக்கு உத்தரவாதமாக வழங்கி வருகிறார்.

2004-ல் இந்தியா ஜிடிபி வளர்ச்சியில் 12-வது இடத்தில் இருந்தது. பின்னர் 2014-ல் ஏழாவது இடத்துக்கு முன்னேறியது. 2024-ல் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே, யார் பிரதமரானாலும் இந்தியா 3-வது பொருளாதார நாடாவதை தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. இந்தியா, அதன்மக்கள் தொகையின் அளவை கருத்தில் கொண்டு இந்த சாதனையை எட்டும். ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு என்பது மக்களின் செழுமைக்கான உண்மையான அளவீடுஅல்ல. தனிநபர் வருமானம் மட்டும்தான் நாட்டு குடிமக்களின் உண்மையான வாழ்க்கைத்தரத்தை எடுத்துக்காட்டும் அளவுகோல்.

அந்த வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின்படி, இந்தியா தனிநபர் வருமானம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.731 டாலருடன் 136-வது இடத்தில்தான் உள்ளது.இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE