பிரதமர் மோடி சாயலில் பானிபூரி வியாபாரி!

By செய்திப்பிரிவு

குஜராத்தின் ஆனந்த் நகரை சேர்ந்தவர் அனில் பாய் தாக்கர் ( 71 ). அவர், அங்கு பானிபூரி கடை நடத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் சாயலில் இருப்பதால் அவரது கடையில் நாள்தோறும் கூட்டம் அலைமோதுகிறது. பானிபூரி சாப்பிட்டுவிட்டு அவரோடு நின்று புகைப்படம், வீடியோ எடுப்பதை வாடிக்கையாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இது குறித்து அனில் பாய் தாக்கர் கூறியதாவது: பிரதமர்நரேந்திர மோடியின் சாயலில் இருப்பதால் என்னை பார்ப்பதற்காக தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர். எனது உண்மையான பெயர் பலருக்கு தெரியாது. உள்ளூர் மக்கள் என்னை 'மோடி' என்றே அழைக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு யூ டியூபர் ஒருவர் எனது கடைக்கு வந்து என்னை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோ வைரலாக பரவியது. அப்போதுமுதல் நான் மிகவும் பிரபலமாகி விட்டேன். குஜராத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் என்னை பார்க்க வருகின்றனர். பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை நான் மிகவும் கண்டிப்புடன் பின்பற்றுகிறேன். எனது கடையை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கிறேன். இவ்வாறு அனில்பாய் தாக்கர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE