2019 மக்களவைத் தேர்தலில் குற்ற பின்னணி வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் வெற்றி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 17-வது மக்களவைத் தேர்தலின்போது அதிக தொகுதிகளில் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

17-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்கள், சொத்து மதிப்பு, குற்றப்பின்னணி விவரங்களை நீதிமன்ற நடுநிலையாளர் குழு பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்துள்ளது.

இந்த பிரமாணப் பத்திர விவரங்கள் மாநில உயர் நீதிமன்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் எம்.பி.க்கள் மீதான குற்றவியல் வழக்குகள், விசாரணை உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின்படி 17-வதுமக்களவைத் தேர்தலில் அதிகஅளவிலான தொகுதிகளில் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் நீதிமன்ற நடுநிலையாளர்குழுவின் மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா கூறியுள்ள தாவது: மக்களவைப் பிரதிநிதிகள் மீதான வழக்கு விசாரணையின் முன்னேற்றம் மற்றும் தாமதத்துக்கான காரணங்கள் குறித்துதெரிந்துகொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உண்டு. எனவே இந்த அறிக்கையில் அவர்களது குற்றவிவரங்கள், வழக்குகள், வழக்கு ஏன் தாமதமாகிறது போன்றவிவரங்களைத் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

2019-ல் நடைபெற்ற 17-வதுமக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7,928 வேட்பாளர்களில் 1,500 பேர் மீது குற்றவியல் வழக்குகள் இருந்தன. இதில் 1,070 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் பதிவாகியிருந்தன.

2019 தேர்தலில் வெற்றி பெற்ற 514 எம்.பி.க்களில் 225 எம்.பி.க்கள் குற்றவியல் பின்னணி கொண்டவர்கள். இதன்மூலம் அதிக தொகுதிகளில் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், தற்போது நடைபெறவுள்ள முதல் மற்றும் 2-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 2,810 வேட்பாளர்களில் (முதல் கட்டம்-1,618 பேர், 2-ம் கட்டம் 1,192 பேர்) 501 பேர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த 501 பேரில் 327 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஏடிஆர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE