“ஒரு புரட்சியை ஏற்படுத்துங்கள்!” - இளைஞர்கள் வாக்களிக்க தலைமைத் தேர்தல் ஆணையர் அழைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “இந்திய ஜனநாயகத்தின் மிகவும் அழகான அனுபவம் தேர்தல். அதில் வாக்களிப்பது போல எதுவுமே இல்லை” என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவம் குறித்து வாக்களர்களுக்கு அவர் நினைவூட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2024-ன் முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கிறது. அதனை முன்னிட்டு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வாக்களர்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது: "நமது மகத்தான ஜனநாயகத்தில் தேர்தல் என்பது உங்களுக்கு (மக்களுக்கு) சொந்தமானது. தேர்வும் உங்களுக்குச் சொந்தமானது. நீங்களே அரசங்காத்தை தீர்மானிக்கிறீர்கள். இதனை நீங்கள், உங்களின் நலனுக்காக செய்கிறீர்கள். உங்களின் குடும்பத்துக்காக, உங்கள் குழந்தைக்காக, உங்களின் கிராமத்துக்காக, நகரத்துக்காக, இந்த நாட்டுக்காகச் செய்கிறீர்கள்.

இந்திய ஜனநாயகத்தின் மிகவும் அழகான அனுபவம் தேர்தல். அதில் வாக்களிப்பது போல எதுவுமே இல்லை. தேர்தலில் பங்கேற்பதில் ஒரு புரட்சியை ஏற்படுத்துமாறு நான் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். உங்கள் ஒரு வாக்கின் முக்கியத்துவத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஒரு முக்கியமான போட்டியில் ஒரு வாக்கு எவ்வளவு முக்கியமான என்ற பல நிகழ்வுகளை நாம் பார்த்துள்ளோம்.

வாக்களர்கள் வாக்களிக்கச் செல்லும்போது வெப்ப அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடியுங்கள். என்றாலும் இந்திய வாக்காளர்களின் உந்துசக்தி கோடை வெப்பத்தைத் தோற்கடிக்கும் என்பது எனக்குத் தெரியும்" என்று அவர் கூறியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றாலும், 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள முதல்கட்டத் தேர்தலில்தான் அதிகபட்சமாக 102 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 73 பொதுத் தொகுதிகள், 18 எஸ்சி தொகுதிகள், 11 எஸ்டி தொகுதிகள் அடங்கும். 21 மாநிலங்கள் மற்றம் யூனியன் பிரதேசங்களில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், வாக்களிக்க 16.63 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில், 8.4 கோடி பேர் ஆண் வாக்காளர்கள், 8.23 கோடி பேர் பெண் வாக்காளர்கள், 11,371 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். 35 லட்சத்து 67 பேர் முதல்முறை வாக்காளர்கள். 20-29 வயதுக்குள் உள்ள இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.51 கோடி.

முதற்கட்டத் தேர்தலில் ஆயிரத்து 625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில், 8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் ஆகியோர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களில் 1,491 பேர் ஆண்கள், 134 பேர் பெண்கள் ஆவர்.

தயார் நிலையில் தமிழகம்! - தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.23 கோடி ஆகும். முதல் தலைமுறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். தமிழகத்தில் 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மொத்தம் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் உள்ளனர். தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக சுமார் ஒரு லட்சம் போலீஸார் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், மருத்துவக் காப்பீடு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க வாகனம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான, வெள்ளிக்கிழமை அன்று சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE