3 கோடி ஏழைகளுக்கு இலவச வீடு: பாஜக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்யப்படும். 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்பன உட்பட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு உள்ளன. டெல்லியில் பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேற்று வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:

மோடியின் உத்தரவாதங்கள்: கடந்த 2020-ம் ஆண்டில் பிஎம் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் இதுவரை 4 கோடி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மேலும் 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

மின்னணு சாதன உற்பத்தி,பாதுகாப்பு துறை, ஆட்டோமொபைல் துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேளாண் துறைக்காக விண்ணில்சிறப்பு செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும். நாடு முழுவதும் 25,000 வேளாண் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்கப்படும்.

மத்திய அரசின் திட்டங்கள் மக்களை முறையாக சென்றடைவதை உறுதிசெய்ய மாவட்டம்தோறும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். இந்த குழுக்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் பாரதம் 5-வது இடத்தில் உள்ளது. விரைவில் 3-வது இடத்தை எட்டுவோம். உள்நாட்டில் சரக்கு விமானங்கள், பயணிகள் விமானங்களை தயாரிக்க புதிய திட்டம் வரையறுக்கப்படும். வாகன உற்பத்தி, மின்சார வாகன உற்பத்தி, செமி கண்டக்டர்,சிப் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி,செயற்கை வைர உற்பத்தியில் உலகின் முன்னோடியாக பாரதம் மாறும்.

நாடு முழுவதும் 30 லட்சம் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரம் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். சர்வதேச விமான நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள்: பாரதத்தின் பாரம்பரிய யோகா, ஆயுர்வேதம், பாரதத்தின் மொழிகள், இசையை பரப்ப உலகம் முழுவதும் ‘திருவள்ளுவர் கலாச்சார மையங்கள்’ உருவாக்கப்படும். பகவான் ஸ்ரீராமரின் புகழ் உலகம் முழுவதும் பரப்பப்படும். உலகம் முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் பாரதத்தின் செம்மொழிகள் (சம்ஸ்கிருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா) குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஊக்கம் அளிக்கும்.

அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடியில் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும். ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு இந்திய வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். அடுத்த கட்டமாக நிலவுக்கு விண்வெளி வீரர் அனுப்பப்படுவார் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்தியர்களின் 500 ஆண்டு கால கனவை, நனவாக்கும் வகையில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு பாரதம் முன்னேறி உள்ளது. நாடு முழுவதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், அம்ருத் பாரத், நமோ பாரத் உள்ளிட்ட ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பிய பொருளாதார வழித்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை பாரதம் பெற்றுள்ளது. இந்தியாவின் முயற்சியால் ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது’ என்பது உள்ளிட்ட 10 ஆண்டுகால சாதனைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்