ஓக் மரங்கள் வளர்த்த பசுமை புரட்சியாளர் முராரி லால் மறைவு

By செய்திப்பிரிவு

கோபேஸ்வர்: மூத்த சூழலியல் செயற்பாட்டாளர் முராரி லால் (91) வயோதிகம் காரணமாக நேற்று காலமானார்.

வனப் பாதுகாப்பை முன்னிறுத்தி பழங்குடியின மக்கள் மரங்களை கட்டித்தழுவி வெட்ட விடாமல் போராடிய சிப்கோ இயக்கம்இமயமலை அடிவாரத்தில் 1970களில் தொடங்கப்பட்டது. காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து மரங்களை பாதுகாத்துப் பராமரித்தல் போன்ற நோக்கங்களுடன் இந்த இயக்கத்தை நிறுவியவர் சுந்தர்லால் பகுகுணா.

இந்த சிப்கோ போராட்டத்தின் தாய் இயக்கமாகக் கருதப்படுவது தஷோலி கிராம சுயாட்சி இயக்கமாகும். 1964-ம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலத்தின் (அன்று உத்தர பிரதேசம்)கோபேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் தலைவராகச் செயல்பட்டவர் முராரி லால். பின்னாளில் சிப்கோ இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில், 91 வயது நிரம்பிய முராரி லாலுக்கு மூன்று தினங்களுக்கு முன்பு சுவாசக்கோளாறு ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு வழங்கப் பட்ட மருத்துவச் சிகிச்சைக்கு பலனின்றி நேற்று காலமானார்.

சிப்கோ இயக்கத் தலைவர்கள் உட்பட பல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் முராரி லால் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE