“அம்பேத்கரே வந்தாலும் இப்போது அரசியலமைப்பை ஒழிக்க முடியாது” - எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதில்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: “பாஜகவுக்கு நாட்டின் அரசியலமைப்புதான் எல்லாமே. பாபாசாகேப் அம்பேத்கரே வந்தாலும் கூட இப்போது அதை ஒழிக்க முடியாது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் பகுதியில் தேர்தல் பிரச்சாரப் பொதுகூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் அரசியலமைப்புச் சட்டம்தான் பாஜக அரசுக்கு எல்லாம். பாபாசாகேப் அம்பேத்கரே இப்போது வந்தாலும் அரசியலமைப்பை ஒழிக்க முடியாது.

நாட்டில் அவசர நிலையை அறிவித்து அரசியல் சாசனத்தை அழிக்க முயன்ற காங்கிரஸ், இப்போது அரசியல் சாசனத்தின் பெயரால் மோடியை அவதூறாகப் பேசுகிறது.

அம்பேத்கர் உயிருடன் இருந்தபோது அவரை தேர்தலில் தோல்வியடையச் செய்த காங்கிரஸ், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க அனுமதிக்காத, நாட்டில் அவசர நிலையைத் திணித்து அரசியல் சாசனத்தை முடிவுக்குக் கொண்டு வர முயற்சித்த காங்கிரஸ் இன்று என்னை பற்றி அவதூறாக பேசுவதற்காக அரசியல் சாசனம் என்ற பெயரில் பொய்களை அள்ளி வீசுகிறது.

நாட்டிலேயே முதன்முறையாக அரசியலமைப்பு தினத்தைக் கொண்டாடத் தொடங்கி வைத்தது நான் தான். பாபாசாகேப் அம்பேத்கருடன் தொடர்புடைய ஐந்து புனிதத் ஸ்தலங்களை நான் உருவாக்கினேன். எனவே, பாபாசாகேப் அம்பேத்கரையும், அரசியல் சாசனத்தையும் அவமதிக்கும் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியின் பொய்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்” என்று பிரதமர் மோடி பேசினார்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் அரசியலமைப்பை மாற்றி விடுவார்கள் என்று எதிர்கட்சியினர் கூறிவரும் நிலையில், அதுகுறித்து பிரதமர் மோடி தற்போது அதுகுறித்து பேசியுள்ளது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE