போக்சோ வழக்கு: எடியூரப்பாவின் குரல் மாதிரியை சேகரித்த புலனாய்வு பிரிவினர்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் மற்றும் பாஜக பிரமுகருமான பி.எஸ்.எடியூரப்பாவின் குரல் மாதிரியை சிஐடி போலீஸ் பிரிவினர் சேகரித்தனர். கடந்த மாதம் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவரது குரல் மாதிரி வெள்ளிக்கிழமை அன்று சேகரிக்கப்பட்டுள்ளது.

17 வயது சிறுமியின் தாயார் அளித்தப் புகாரின் பேரில் பெங்களூரு சதாசிவ நகர் போலீஸார் கடந்த மாதம் (மார்ச் 14) வழக்குப் பதிவு செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தாய், மகள் என இருவரும் எடியூரப்பாவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமியை பாலியல் ரீதியாக அவர் தொந்தரவு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை எடியூரப்பா மறுத்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக அவரது வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என சிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தடயவியல் ஆய்வுக்காக அவரது குரல் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் குரல் மாதிரி மிகவும் முக்கிய ஆதாரம் என தெரிவித்துள்ளனர். ஏனெனில், புகார்தாரர் தரப்பில் வீடியோ ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE