வயநாடு தொகுதி பாஜக வேட்பாளரின் வினோத வாக்குறுதி - திப்பு சுல்தான், சுல்தான் பத்தேரி கனெக்‌ஷன்

By செய்திப்பிரிவு

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் அம்மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகின்றனர்.

இந்தச் சூழலில் வினோத வாக்குறுதி ஒன்றை சுரேந்திரன் அறிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் அதனை நிறைவேற்றுவேன் என்றும் அவர் அறிவித்துள்ளார். இது திப்பு சுல்தான் மற்றும் சுல்தான் பத்தேரி கனெக்டிவிட்டியை கொண்டுள்ளது.

“திப்பு சுல்தான் யார்? அவருக்கும் வாயநாடுக்கும், இங்குள்ள மக்களுக்கும் என்ன தொடர்பு? கணபதி வட்டம் என அறியப்பட்ட இடத்தை சுல்தான் பத்தேரி என மாற்றியுள்ளனர். அந்த வகையில் இடத்தின் பெயரை மாற்றுவதில் நான் முக்கியத்துவம் அளிப்பேன்” என சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

மைசூருவை ஆட்சி செய்த திப்பு சுல்தான், 18-ம் நூற்றாண்டில் கேரளத்தின் வடக்கு பகுதியை கைப்பற்றியவர். “இது கேரளா. அதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். அவர் கொடுத்த வாக்குறுதி நடக்காத ஒன்று. அவர் வெற்றி பெற மாட்டார். பெயரையும் மாற்ற மாட்டார்” என ஐயூஎம்எல் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE