“70 கோடி மக்கள் வைத்துள்ள அதே அளவு பணம் 22 பெரும் பணக்காரர்கள் வசம்” - ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

பிகானிர்: நாட்டில் உள்ள 70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவு பணம் 22 பெரும் பணக்கார்களிடம் இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் பிகானிர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, "வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் ஆகியவை நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். ஆனால், நம்நாட்டு ஊடகங்களைப் பார்க்கும்போது, ​​அம்பானி குடும்பத்தில் நடக்கும் திருமணம்தான் மிகப் பெரிய செய்தியாக இருப்பதைப் பார்க்கலாம். பொதுமக்களின் குரலை உயர்த்துவதுதான் ஊடகங்களின் வேலை. ஆனால், அதைச் செய்ய அவர்களின் கோடீஸ்வர உரிமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களின் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், தலித் மற்றும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் காணப்பட மாட்டார்கள். நாட்டின் ஊடகங்கள் வெறும் 15 - 20 பேரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவர்கள் இரவும் பகலும் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பாடுகிறார்கள். ஊடகங்களில் 24 மணி நேரமும் நரேந்திர மோடியின் முகத்தை நீங்கள் பார்ப்பீர்கள். நாட்டில் உள்ள 70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவு பணம், வெறும் 22 பெரும் பணக்காரர்களிடம் இருக்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும் என நமது விவசாயிகள் கேட்கிறார்கள். வேலைவாய்ப்பு வேண்டும் என நமது இளைஞர்கள் கேட்கிறார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என நமது பெண்கள் கேட்கிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை கேட்கும் விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதிகள் என்கிறார். இந்திய வரலாற்றில் முதன்முறையாக நமது விவசாயிகள் வரி கட்டுகிறார்கள்.

காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சியில், நாட்டின் இளைஞர்களுக்கு பயிற்சிக்கான உத்தரவாதத்தை நாங்கள் வழங்குகிறோம். ஓர் ஆண்டு கால பயிற்சியின்போது (apprenticeship) அவர்களுக்கு ரூ.1 லட்சம் கொடுக்கப்படும். சிறப்பாக பணியாற்றினால் அவர்களுக்கு வேலை உறுதி” என்று ராகுல் காந்தி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE