திருமணத்தின் போது கன்னியாதான சடங்கு செய்வது கட்டாயம் இல்லை: அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அசுதோஷ் யாதவ், திருமணமானவர். குடும்ப தகராறு காரணமாக, இவரது மனைவி வீட்டார் இவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு லக்னோவில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது அசுதோஷ் யாதவுக்கு எதிராக கடந்த மார்ச் 6-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அசுதோஷ் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி அமர்வு முன்பு நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது, ‘‘இந்து திருமண சட்டத்தின்படி, திருமணத்தின் போது மகளை அவரது தந்தை கைப்பிடித்து மணமகனிடம் ஒப்படைக்கும் சடங்கு கட்டாயம் செய்ய வேண்டும். ஆனால், என் விஷயத்தில் அப்படி கன்னியாதான சடங்கு நடைபெறவில்லை’’ என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்து திருமண சட்டத்தின்படி கன்னியாதான சடங்கு ஒன்றும் அவசியமானது இல்லை. திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் இணைந்து செய்யும் சப்தபதி சடங்குதான் முக்கியம். (மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டிய பிறகு இருவரும் அக்னியை 7 முறை வலம் வந்து 7 உறுதிமொழிகளை எடுக்கும் சடங்குதான் சப்தபதி). ஒட்டுமொத்த சூழ்நிலைகளையும் பரிசீலித்த பிறகு கன்னியாதான சடங்கு அவசியம் இல்லாதது என்று அறிய முடிகிறது. இந்த வழக்கில் இறுதி முடிவெடுப்பதற்கு கன்னியாதான சடங்கு நடந்ததா, இல்லையா என்பது விஷயமல்ல. எனவே, இதை நிரூபிக்க சட்டப்பிரிவு 311 சிஆர்பிசி சட்டத்தின்படி சாட்சிக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE