“பெங்களூருவின் குடிநீர் பற்றாக்குறை கவலை அளிக்கிறது” - நிர்மலா சீதாராமன்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: “பெங்களூரு நகரம் கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவது கவலை அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது மாசடைந்த நீர் மக்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அதன் காரணமாக காலரா போன்ற நோய் பரவல் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முதல்வர் சித்தராமையா ரூ.20,000 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளை நிறுத்தி வைத்துள்ளார். இதில் நீர் மற்றும் பாசன பணிகளும் அடங்கியுள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பை உறுதி செய்யும் ஜல் ஜீவன் திட்ட பணிகளையும் அவர் நிறுத்தி வைத்துள்ளார்” என்றார்.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக விளங்கும் பெங்களூருவில் கடந்த மார்ச் மாதம் முதல் த‌ண்ணீர் பஞ்சம் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழியாததால் பெங்களூருவுக்கு நீரை வழங்க முடியாமல் மாநகராட்சியின் நீர் விநியோக வாரியம் பின்னடவை எதிர்கொண்டது. இதனால் டேங்கர் லாரி நீரின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE