“நாட்டையும் ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி சிதைக்கிறார்” - சோனியா காந்தி தாக்கு

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: “நாட்டையும் ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி சிதைக்கிறார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தப்பட்டு பாஜகவில் இணைய வைக்கப்படுகின்றனர்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ஜெய்ப்பூரில் இன்று (சனிக்கிழமை) நடந்த பேரணியில் பேசிய சோனியா காந்தி, “இந்த நாட்டையும், அதன் ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி சிதைக்கிறார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் அச்சுறுத்தப்பட்டு, பாஜகவில் இணைய வைக்கப்படுகின்றனர் இன்று நம் நாடும், நம் நாட்டின் ஜனநாயகமும் ஆபத்தில் இருக்கிறது.

ஜனநாயக அமைப்புகளும் சிதைக்கப்படுகின்றன. நம் அரசியல் சாசனத்தை மாற்ற சதி செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த அரசாங்கம் வேலையின்மையை அதிகரிக்க, பணவீக்கத்தை அதிகரிக்க, சமத்துவமின்மையை அதிகரிக்க, அடக்குமுறைகளை அதிகரிக்க எந்த வாய்ப்பையும் தவறவிட்டதில்லை. மோடி அரசு நமக்குச் செய்தவை அனைத்து நம் கண் முன்னால் நிற்கின்றன. தன்னை மிகப் பெரியவர் என நினைத்துக் கொள்ளும் மோடி, தேசத்தின் மாண்பையும், ஜனநாயகத்தையும் சிதைத்து வருகிறார்” என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா காந்தி, “டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர்” என்றார்.

முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்; NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்; குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்; எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50% என்ற உச்ச வரம்பை நீக்கும் வகையில் சட்டத் திருத்தம்; பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும் முதலான வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றன. வாசிக்க > பாஜக சுவடுகளுக்கு ‘குறி’, மாநிலங்களை ‘கவரும்’ உத்தி... - காங்கிரஸ் வாக்குறுதிகள் சொல்வது என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE