சிறையில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சில தினங்களுக்கு முன்பு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் தனது கட்சியினருக்கு அனுப்பிய செய்திக்குறிப்பை அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்றுவாசித்தார். அதில் கூறப்பட்டதாவது:

நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் எனது குடும்பமான டெல்லியின் 2 கோடி மக்களும் எந்த விதமான பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக் கூடாது. ஆகவே ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் தினந்தோறும் உங்கள் தொகுதிகளைகட்டாயம் பார்வையிடுங்கள். கட்சி செயல்பாடுகளைத் தாண்டி மக்களின் குறை தீர்ப்பதே நமது கடமை. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதனிடையே, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கோரி டெல்லிஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மன்மோகன் மற்றும் மன்மீத் பிஎஸ் அரோராஅடங்கிய அமர்வு கூறுகையில்,``தனிநபரின் விருப்பு வெறுப்பைவிட தேசநலனே முக்கியம். கேஜ்ரிவால் டெல்லிமுதல்வராக தொடர முடிவெடுத்து விட்டதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க மட்டுமே நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது'' என்றனர்.

வாசிப்பு, யோகா, தியானம்: ராமாயணம், மகாபாரதம், பிரதமர்கள் எப்படி முடிவுசெய்கிறார்கள் ஆகிய நூல்களை வாசித்தபடியும் யோகாசனம், தியானம் ஆகியவற்றை செய்தபடியும் திஹார் சிறையில் கேஜ்ரிவால் நேரம் கழிப்பதாக திஹார் சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE