தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் பரூக் அப்துல்லா (86) இம்முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அவரது மகன் உமர் அப்துல்லா நேற்று தெரிவித்துள்ளார். இது குறித்து உமர் அப்துல்லா மேலும் கூறுகையில், “உடல்நிலையை கருத்தில் கொண்டு வரும் மக்களைவைத் தேர்தலில் பரூக் அப்துல்லா போட்டியிடவில்லை.
இது தொடர்பாக அவர், கட்சியின் பொதுச் செயலர் அலி முகம்மதிடமும் கட்சியின் மற்ற உறுப்பினர்களிடமும் கலந்தாலோசித்து அனுமதி பெற்றுள்ளார்” என்று குறிப்பிட்டார்.
பரூக் அப்துல்லா 1980-ம் ஆண்டு முதன் முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982-ம் ஆண்டு அவரது தந்தை சேக் அப்துல்லா இறப்புக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் முதல்வராக அவர் பொறுப்பேற்றார். மூன்று முறை ஜம்மு காஷ்மீரின் முதல்வாராக அவர் பதவி வகித்துள்ளார். தற்போது அவர் ஸ்ரீநகர் தொகுதி எம்பியாக உள்ளார்.