வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேரளாவில் தவறான செய்தி வெளியிட்ட யூடியூபர் கைது

By செய்திப்பிரிவு

ஆலப்புழை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேரளாவில் தவறான செய்திகளை வெளியிட்ட யூடியூபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளாவின் ஆலப்புழையைச் சேர்ந்த வெனிஸ் டி.வி. என்டர்டெயின்ட்மெண்ட் என்ற யூடியூப் சேனலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) பற்றிதவறான தகவல்கள் வெளியாயின. இதையடுத்து ஆலப்புழை தெற்கு போலீஸார் அந்த யூடியூப்சேனல் உரிமையாளர் மீது வழக்குதொடர்ந்து அவரைக் கைது செய்தனர். அவர் பெயர் விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.

வரும் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் இவிஎம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு சமூகத்தில் பதற்றத்தையும், பிளவையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்று அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவிஎம்-களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டுகள் முறையை மீண்டும் மக்களவைத் தேர்தலில் அமல்படுத்த வேண்டும் என்று அவர் சேனலில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த யூடியூப் வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் அவர் பதிவேற்றியிருந்தார். இதைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 26-ம் தேதி கேரளாவில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE