காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: கட்சியிலிருந்து சஞ்சய் நிருபம் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி, சிவசேனாவுடன் (உத்தவ் அணி) கூட்டணி வைத்ததை மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபம் வெளிப்படையாக எதிர்த்து வருகிறார். ‘‘மகாராஷ்டிராவில் 17 வேட்பாளர்களை தன்னிச்சையாக சிவசேனா (உத்தவ்) அணி அறிவித்தது. இது மும்பையில் காங்கிரஸ் கட்சியை ஒழிக்கும் சதி’’ என சஞ்சய் நிருபம் கூறியிருந்தார்.

இது குறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி தலைவர் நானா படோல் கூறுகையில், ‘‘சஞ்சய் நிருபம் தெரிவித்த கருத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசுவது போல் உள்ளது. அவர் மீது இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து சஞ்சய் நிருபமை காங்கிரஸ் கட்சி நேற்று நீக்கியது. இந்நிலையில், கட்சியிலிருந்து 6 ஆண்டு காலம் அவரை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE