நிதி சிக்கலுக்கு கேரள அரசின் தவறான நிர்வாகமே காரணம்: கூடுதல் கடன் வாங்க உச்ச நீதிமன்றம் அனுமதி மறுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடன் வாங்குவது தொடர்பாக மத்திய அரசு விதித்திருக்கும் கட்டுப்பாட்டை தளர்த்தக் கோரி கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

இம்மனுவை கடந்த திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், கே வி விஸ்வநாதன் அமர்வு, கேரள அரசின் கோரிக்கையை நிராகரித்ததோடு, அம்மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரை செய்தது. கேரள அரசு போதிய நிதி இல்லாமல் திணறிவருகிறது. இந்நிலையில் நிதி ஆண்டுக்கான செலவினங்களை சமாளிக்க கூடுதல் கடன் வாங்க அனுமதி தர வேண்டும் என்று கோரியது. கேரள அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஏற்கெனவே கடன் வாங்கிவிட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடன் வாங்குவது தொடர்பாக மத்திய அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாடானது மாநில அரசின் நிதி சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது. இது மாநிலங்களின் நிதி செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறிய கேரள அரசு, தங்கள் மாநிலத்தின் நிதித் தேவையை சமாளிக்க கூடுதலாக கடன் வாங்க அனுமதி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனு நேற்றுமுன்தினம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், கே வி விஸ்வநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “கேரள மாநிலத்தின் நிதிப் பிரச்சினைக்கு அம்மாநிலத்தின் தவறான நிர்வாகமே காரணம். ஏற்கெனவே, இந்த மனுவை தாக்கல் செய்த பிறகு மத்திய அரசிடமிருந்து கேரளா ரூ.13,608கோடி பெற்றுவிட்டது. இத்தகையசூழலில், கூடுதல் கடன் வாங்கஇடைக்கால அனுமதி தருவது என்பது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடும்.

அரசியல் சாசன அமர்வுக்கு.. எனினும், மாநிலங்கள் கடன்வாங்குவது தொடர்பான அரசமைப்புச் சட்டத்தின் 293-வது பிரிவின் பல்வேறு கோணங்களை அலசுவதற்காக இந்த வழக்கை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்கிறோம்” என்று தெரிவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE