2-ம் எண் அறை, சலுகைகள்... - டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அரசு மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 28-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பின்னர் மார்ச் 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஏப்ரல் 1-ஆம் தேதி (இன்று) வரை அமலாக்கத் துறை காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 1) அவர் மீண்டும் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை காவல் நீட்டிப்பை கோரவில்லை. ஆனால் “கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வேண்டுமென்றே விசாரணையை திசை திருப்புகிறார். அவருடைய டிஜிட்டல் உபகரணங்களின் கடவுச் சொற்களைத் தர மறுக்கிறார். ஆகையால் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்று அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனயைடுத்து கேஜ்ரிவாலை வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அரவிந்த் கேஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். திகார் சிறையில் அவருக்கு 2-ம் எண் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்படுவதற்காக அவரை அழைத்துவரும்போது சிறைக்கு வெளியே ஆம் ஆத்மி தொண்டர்கள் கூடியிருந்தனர். அவர்கள் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

முன்னதாக, பகவத் கீதை, ராமாயணம் மற்றும் நீரஜா சவுத்ரி எழுதிய "How Prime Minister Decided" ஆகிய புத்தகங்களை சிறைக்கு எடுத்துச் செல்ல அனுமதி வேண்டும் என்று கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதற்கு அவருக்கு நீதிமன்றம் அனுமதியும் அளித்தது. இதற்கிடையே, அவருக்கு சிறையில் அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன் விவரம்:


இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா, மக்களவைத் தேர்தல் முடியும் வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிறையில் வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம் என்று குற்றம்சாட்டினார். அதன் விவரம்: “கேஜ்ரிவாலை தேர்தல் முடியும் வரை சிறையில் வைப்பதே பாஜகவின் திட்டம்” - சுனிதா

இதே மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திரா ஜெயின் ஆகியோரும் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகன் கவிதாவும் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE