“நாடு இதுவரை வளர்ச்சியின் ட்ரெய்லரை மட்டுமே பார்த்துள்ளது” - மீரட்டில் பிரதமர் மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

மீரட்: "நாடு இதுவரை வளர்ச்சியின் ட்ரெய்லரை மட்டும் தான் பார்த்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் வெறும் அரசாங்கத்தை உருவாக்குவதற்கானது இல்லை. மாறாக வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கானது" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீரட்டில் இருந்து தொடங்கி வைத்தார். மக்களவையில் அதிக இடங்களைக் கொண்ட மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் மீரட்டில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்

அப்போது அவர், “எங்களது அரசு மூன்றாவது தடவை ஆட்சிப் பொறுப்பு ஏற்கத் தயாராகி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் பாதைக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எங்களின் அடுத்த ஆட்சியின் முதல் 100 நாட்களில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்கிறோம்.

கடந்த 10 ஆண்டுகளில் நாடு பார்த்தது வளர்ச்சியின் ட்ரெய்லரை மட்டுமே. இனி நாட்டை இன்னும் வேகமாக முன்னேற்றுவோம். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் என்பது வெறும் அரசை உருவாக்குவதற்கானது மட்டும் இல்லை. மாறாக அது வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கானது. வளர்ச்சிக்கான ஆதாரத்தை உருவாக்கி நாடு மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் போது வறுமை ஒழிக்கப்படும். நடுத்தர வர்க்கத்தினர் நாட்டுக்கு புதிய பலத்தை வழங்குவார்கள்.

நாட்டில் இன்று நவீன உள்கட்டமைப்பு வசதிகள் பரவலாக்கப்படுகின்றன. கட்டுமான உள்கட்டமைப்பில் இந்தியா இன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் மூதலீட்டை உருவாக்கியுள்ளது. அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய தீர்மானங்களுடன் பெண்களுக்கான அதிகாரங்கள் முன்னேற்றமடைந்துள்ளன. இந்தியாவின் நம்பகத்தன்மை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உலகம் இந்தியாவை நம்பிக்கையுடன் உற்று நோக்குகிறது.

நமது பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கியுள்ளோம். அவர்கள் சொந்த தொழில்களைச் செய்கிறார்கள். 10 கோடி பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் அங்கமாக உள்ளனர். 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக உருவாக்குவதே நம் கனவு. அதை நோக்கி நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இது மோடியின் உத்தரவாதம்.

நாங்கள் ஊழலுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கினோம். அவர்கள் இண்டி கூட்டணியை உருவாக்கினார்கள், தோல்வியைக் கண்டு மோடி பயந்து விட்டதாக எண்ணிக் கொண்டார்கள். ஆனால் இந்தியா எனது குடும்பம். எனக்கு பயம் இல்லை. ஊழலில் ஈடுபட்டவர்கள் எல்லாம் இப்போது கம்பிகளுக்கு பின்னால் இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்திலும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை” இவ்வாறு பிரதமர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE