ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காக்க இண்டியா கூட்டணி டெல்லியில் இன்று போராட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான கோபால் ராய் கூறியுள்ளார்.

ஆனால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஜனநாயகத்தை காக்க இண்டியா கூட்டணி டெல்லியில் ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடத்துகிறது. இது எந்த தனி நபருக்கு ஆதரவான போராட்டம் அல்ல’’ என கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போராடம் தனி நபரை மையப்படுத்தும் போராட்டம் அல்ல. அதனால்தான் இதற்கு ஜனநாயகத்தை காக்கும் போராட்டம் என பெயர் வைத்துள்ளோம்.ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காப்பதற்காகத்தான் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட எதிர்க்கட்சியினருக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கப்படும்.

பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் மீதான அடக்குமுறை, தேர்தல் பத்திர ஊழல் போன்ற விஷயங்களும் இந்த போராட்டத்தில் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE