எடியூரப்பாவின் ஆசியால் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு மீண்டும் வாய்ப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் (67) கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் பாஜக மேலிடம் வயோதிகம் காரணமாக அவருக்கு சீட் வழங்க மறுத்தது. இதனால் அதிருப்தி அடைந்த அவர் காங்கிரஸில் இணைந்து தேர்தலை சந்தித்தார். அவர் தேர்தலில் தோற்றாலும் காங்கிரஸ் அவருக்கு மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை வழங்கியது.

இந்நிலையில், ஜெகதீஷ் ஷெட்டர் கடந்த ஜனவரியில் காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார். மேலும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என தன் அரசியல் குரு எடியூரப்பா மூலம் பாஜக மேலிடத்துக்கு தூது அனுப்பினார். ஆனால் கர்நாடக பாஜகவை சேர்ந்த ஈஸ்வரப்பா, சதானந்த கவுடா, அபய் பாட்டீல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் பாஜக மேலிடம் ஜெகதீஷ் ஷெட்டருக்கு பெலகாவி மக்களவைத் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கியுள்ளது. அதேவேளையில் ஈஸ்வரப்பா, சதானந்த கவுடா ஆகியோருக்கு சீட் வழங்க மறுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE