விபத்தில் ஊனமுற்ற மும்பை காவலருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் போரிவாலி புறநகர் பகுதியில் உள்ள கஸ்தூர்பா மார்க் காவல் நிலையத்தின் காவலர் ராஜேஸ்வர் பவார்.

இவர் கடந்த 2017 அக்டோபரில் நடைபெற்ற ஒரு விபத்தில் பலத்த காயமடைந்து நீண்ட காலம் சிகிச்சையில் இருந்தார். இந்த விபத்தில் அவருக்கு 71 சதவீத அளவுக்கு உடல் ஊனம் ஏற்பட்டது.

முன்னதாக, 2015-ல் காவல் துறைக்கும் ஆக்ஸிஸ் வங்கிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி விபத்து காப்பீட்டுடன் ஏடிஎம் அட்டையும் ராஜேஸ் பவாருக்கு வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இழப்பீடுகோரி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மற்றும் ஆக்ஸிஸ் வங்கிக்குகடந்த 2019 ஏப்ரலில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப் பித்தார்.

இருப்பினும், தாமதமாக காப்பீட்டுத் தொகை கோரியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறிஇழப்பீட்டு தொகையை தரமுடியாது என வங்கி, காப்பீட்டு நிர்வாகம் சார்பில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, ராஜேஸ்வர் நுகர்வோர் ஆணையத்திடம் புகார் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட ஆணையம் பிறப்பித்த உத்தரவு:

6 சதவீத வட்டியுடன்... காவல் துறையும் ஆக்ஸிஸ் வங்கியும் காப்பீடு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது உண்மை என்பது விசாரணையில் தெரியவருகிறது. இந்த நிலையில், காப்பீட்டுதாரரின் கோரிக்கையை தன்னிச்சையாக நிராகரிப்பதை ஏற்க முடியாது. பாதிக்கப்பட்ட காவலருக்கு ரூ.30 லட்சத்தை 6 சதவீத வட்டியுடன் திருப்பித்தர வேண்டும். மேலும், காவலர் ராஜேஸ்வர் பவாருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.2.50 லட்சமும், வழக்கு செலவாக ரூ.25,000-ம் கூடுதலாக வழங்க வேண்டும்.

இவ்வாறு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE