பாஜகவில் தேவகவுடா கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு: பிரஜ்வல் ரேவண்ணா தகவல்

By இரா.வினோத்


கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தெரிவித்தார்.

கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதில் மண்டியா, கோலார், ஹாசன், தும்கூர், பெங்களூரு ஊரகம் ஆகிய 5 தொகுதிகளை மஜத கேட்டதாக தெரிகிறது. அதனை ஏற்க மறுத்த பாஜக மேலிடம், 2 தொகுதிகளை தருவதாக கூறியதாக செய்திகள் வெளியாகின. இதனால் முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவியது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும் மஜத எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா கூறுகையில், ''பாஜக - மஜத கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. இரு கட்சிகளும் ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்ளும். கர்நாடகாவில் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

பிரதமர் மோடியின் ஆட்சியை மீண்டும் அமைக்க மஜத துணையாக நிற்கும். பாஜக கூட்டணியில் மஜத-வுக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. அது தொடர்பாக இரு கட்சிகளின் தலைவர்கள் ஓரிரு நாட்களில் அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள். எந்தெந்த தொகுதி, யார் போட்டியிடுவார்கள்? என்பதை நான் சொல்லக் கூடாது'' என்றார்.

இதனிடையே மஜதவுக்கு மண்டியா, ஹாசன், கோலார் ஆகிய 3 தொகுதிகளை பாஜக மேலிடம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் தேவகவுடாவின் மருமகனும் மருத்துவருமான மஞ்சுநாத், பாஜக வேட்பாளராக பெங்களூரு ஊரகம் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE