புதுடெல்லி: மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், மக்கள் இதனை வரவேற்பதாக டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.
“மதுபான கொள்கை தொடர்பான வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் கேஜ்ரிவால் இருந்தார். இந்த சூழலில் அவரை அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளது உண்மைக்கு கிடைத்துள்ள வெற்றி. இளைஞர்களை மது பழக்கத்துக்கு தள்ள முயன்ற கேஜ்ரிவால் அரசு எதிர்கொண்டுள்ள வீழ்ச்சி இது. அவர் செய்த பாவத்துக்கான பலனை நிச்சயம் அனுபவிக்க வேண்டும். மக்கள் இதனை வரவேற்பார்கள்” என வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பிஆர்எஸ் கட்சியின் கவிதா கைது செய்யப்பட்டார். தற்போது கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் நாட்களில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்படுவார்கள் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.