சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு உயர்வு உட்பட காங்கிரஸின் 5 தேர்தல் வாக்குறுதிகள்

By செய்திப்பிரிவு

மக்களவை தேர்தலை முன்னிட்டு, ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை, 30 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் உட்பட பல வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.

இந்நிலையில், மேலும் 5 தேர்தல் வாக்குறுதிகளை கார்கே நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் தொழிலாளர் நீதி (ஷிரமிக் நியாய்), அனைவரும் உள்ளடக்கிய நீதி ( ஹிசதரி நியாய் ) ஆகியவை செயல்படுத்தப்படும்.

அனைவரும் உள்ளடக்கிய நீதியின்படி சமூக, பொருளாதார, ஜாதிவாரி கணக்கெடுப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு நிறுவனங்களில் சமூக, பொருளாதார, மக்கள் தொகையின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

மேலும், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் 50 சதவீதமாக உயர்த்தப்படும்.

அத்துடன் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு சட்டப் பூர்வமான சிறப்பு திட்டம் அறிவிக்கப்படும். பழங்குடியினத்தவர்களின் வன உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் ஓராண்டுக்குள் தீர்த்து வைக்கப்படும்.

பழங்குடியினத்தவருக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் திரும்ப பெறப்படும். தொழிலாளர் உரிமை: அதேபோல் தொழிலாளர்களின் உரிமைகள் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அதில் மருத்துவ உரிமை, ஒரு நாளைக்கு தேசிய அளவில் சம்பளம் ரூ.400 ஆக நிர்ணயிக்கப்படும்.

நகர்ப்புற வேலை வாய்ப்பு உறுதி சட்டம் அறிமுகப் படுத்தப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்கப்படும். இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE