‘தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’ - கபில் சிபல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினை நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்தது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல், “அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தற்போது உறக்கத்தில் இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் இவ்வாறு செயல்பட்டிருந்தால் அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள். தற்போது அவர்கள் கொஞ்சம் கூடுதலாக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர். ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியாவின் கருப்புப் பணத்தை எடுத்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் தற்போதைய நிகழ்வைப் பார்க்கும் போது அந்த தொகைகள் அவர்களின் வங்கிக்கணக்கில் மாற்றப்பட்டது போல தெரிகிறது.

என்னைப் பொறுத்த வரையில் இந்த விவகாரத்தை ஏற்கெனவே இருக்கிற விசாரணை அமைப்புகளைக் கொண்டு விசாரணை செய்யக்கூடாது. அவர்கள் என்ன செய்தார்கள், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தீர்மானிக்க வேண்டியது தற்போது நீதிமன்றத்தின் பொறுப்பு.

2ஜி வழக்கு விவகாரத்தில் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தியது போல இந்தத் தேர்தல் பத்திரம் விவகாரத்திலும் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். சட்டம் இப்போது எப்படி இதைப் பார்க்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதேபோல் பிஎம் கேர்ஸ்-க்கு எவ்வளவு நிதி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்தக் கட்சி எவ்வளவு பணம் கொடுத்தது என்பது விசாரணைக்கு உரிய விஷயம்.” என்றார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதில், ஏப்ரல் 12, 2019 முதல் ரூ. 1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் இரண்டு பட்டியல்கள் உள்ளன. முதலாவதாக, தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. மற்றொன்றில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் உள்ளன. இருப்பினும், எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் சேர்த்து இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது. தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி புதன்கிழமை தாக்கல் செய்தது. அதில், ‘கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15-ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்