குவாஹாட்டி: அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஐஐடியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை, காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டது. ஆனால், திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. பல திட்டங்கள் தாமதம் செய்யப்பட்டன. இது உலக அரங்கில் இந்தியாவின் மீதான மதிப்பைக் குறைத்தது. இந்தியா அதன் திட்டங்களை உரிய நேரத்தில் முடிக்காது என்றபிம்பத்தை உருவாக்கியது.
ஆனால், மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு நிலைமை மாறத்தொடங்கியது. பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியதோடு அவற்றை உரிய நேரத்தில் முடிக்கவும் செய்தார். அவரது இந்த முயற்சியால், வடகிழக்கு மாநிலங்கள் பெரும் பலன் அடைந்துள்ளன. வளர்ச்சித் திட்டங்களில் வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்தியஅரசு முக்கியத்துவம் வழங்குகிறது.
பிரதமர் மோடியும் ஏனைய மத்திய அமைச்சர்களும் இந்தப் பிராந்தியத்துக்கு எத்தனை முறை வருகை தந்திருக்கிறார்கள் என்பதே அதற்கு சாட்சி. அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களை உரியநேரத்தில் நிறைவேற்றி அவற்றைசெயல்பாட்டுக்குக் கொண்டுவருதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி மாடல். இவ்வாறு அவர் தெரிவித்தார்.