புனே: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து, புனேவில் உள்ள பாரதி மருத்துவமனையில் நேற்றிரவு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பிரதிபா பாட்டீலின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1934ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி பிறந்த பிரதிபா பாட்டீலுக்கு தற்போது 89 வயதாகிறது. கடந்த 2007 முதல் 2012 வரை நாட்டின் 12வது குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீல் இருந்துள்ளார். நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் என்பது குறிப்பிடத்தக்கது.