மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக போஜ்புரி பாடகர் பவன் சிங் அறிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தின் அசன்சோல் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டிருந்தவர் போஜ்புரி பாடகர் பவன் சிங். இவர் தன்னால் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். இது பாஜக மேலிடத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பவன் சிங் வெளியிட்டிருந்த பதிவில், பாஜகவின் தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி என் மீது நம்பிக்கை வைத்து அசன்சோல் தொகுதியின் வேட்பாளராக எனது பெயரை அறிவித்தது. ஆனால் சில காரணங்களால் என்னால் தேர்தலில் போட்டியிட இயலாது என்று தெரிவித்திருந்தார்.
பாஜக வேட்பாளராக 38 வயதான போஜ்புரி பாடகர் பவன் சிங் தேர்வு செய்யப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பலர் அவரது பாடல்களை முன்னிலைப்படுத்தி கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் மேற்கு வங்கப் பெண்கள் குறித்த தவறான வகையில் குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அசன்சோல் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பாக தற்போது பாலிவுட் நடிகரான சத்ருகன் சின்ஹா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குறுதியை நிறைவேற்ற இந்நிலையில் தேர்தலில் போட்டியிடப் போவதாக பவன்சிங் நேற்று அறிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தொகுதி மக்களுக்கும், எனது தாய்க்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வரும் தேர்தலில் நான் போட்டியிடுவேன். அதற்காக உங்களது ஆசிகளையும், ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.