திஸ்பூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து அசாம் மாநிலத்தில், ‘அனைத்து அசாம் மாணவர் சங்கம்’ (ஏஏஎஸ்யூ) நேற்று போராட்டம் நடத்தியது. இதனிடையே, சிஏஏ-வுக்கு எதிரான மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அசாம் காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிஏஏ அமலுக்கு வருவதாக மத்திய அரசு நேற்றுமுன்தினம் அறிவிப்பாணை வெளியிட்டதையடுத்து ஏஏஎஸ்யூ உட்பட 30-க்குமேற்பட்ட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. அப்போது சிஏஏ ஆவணங்கள் எரிக்கப்பட்டன. இதுகுறித்து ஏஏஎஸ்யூ தலைமை ஆலோசகர் சமுஜ்ஜல் பட்டாச்சார்யா கூறுகையில், “அசாம் மக்களின் கலாச்சாரம், அடையாளம் மீது பாஜக அரசு பெரும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. இச்சட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம்” என்றார்.